T3-TRAIN THE TRAINER, TRAINING AND RECRUITMENT: – ராஜரிஷி. ஜனக மகாராஜர் போதித்த மௌனத்தின் ஞானம் இது!

Tuesday, July 21, 2026

– ராஜரிஷி. ஜனக மகாராஜர் போதித்த மௌனத்தின் ஞானம் இது!

 – ராஜரிஷி.

ஜனக மகாராஜர் போதித்த மௌனத்தின் ஞானம் இது!

-|  மன்னர் ஜனக ரிஷியும் & ஸ்ரீ சுக முனிவரும் !!


தன் சீடருக்கு ஒரு குருவின் விசித்திரமான சோதனை !!

ஆத்ம ஞானம் தேடும் ஒருவரின் வாழ்வில் குருவின் பங்கை விளக்குவதற்காக, சுக முனிவர் தனது குருவான ஜனக மன்னரைச் சந்தித்த நிகழ்வு.

எவ்வாறு அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பதை இங்கே விவரிப்பில் அறியுங்கள்.

ஒரு காலத்தில் சுக பிரம்மரிஷி எனும் மகத்தான ஞானி வாழ்ந்தார்.
இப்போதும் ஒளியுடல் பெற்ற நிலையில் வாழ்பவரும் ஆவார்.

அவர் வேதவியாசரின் ஒரே புதல்வர்.

பிற
மனிதர்கள் பல ஆண்டுகள் கற்று அறியும் வேதங்கள், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள், யோக ஞானங்கள் அனைத்தையும், அவர் தாயின் கருவிலேயே அறிந்து கொண்டார்.

கருவிலிருந்து வெளியே வந்தபோதே அவர் ஒரு பூரண ஞானியாக விளங்கினார். யாரும் அவரை தனியே தீட்சை கொடுத்து கற்பிக்கவில்லை; ஞானம் அவருடன் பிறந்தது.

ஒருநாள் சுகர், “ஸ்ரீமன் நாராயணரை நேரில் தரிசிக்க வேண்டும்” என்று எண்ணி வைகுண்டத்தை நோக்கிச் சென்றார். வைகுண்ட வாசலில் இருந்த தெய்வீக காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

சுகர் கூறினார்:
“நான் வேதவியாசரின் மகன் சுகன். பரமாத்மா நாரணரை  தரிசிக்க வந்துள்ளேன்.”

அவர்கள் அவரைப் பார்த்து,
“உன்னுள் வேதங்கள் நிறைந்திருக்கின்றன. உபநிஷத்துகள் ஒளிர்கின்றன. எல்லா சாஸ்திர ஞானங்களும் உன்னிடமே இருக்கின்றன.

ஆனால் உனக்கு ஒரு குரு இல்லை. குருவின்றி இங்கு அனுமதி இல்லை.”
என்று கூறினர்.
இதைக் கேட்டு சுகர் குழம்பினார்.

“குரு என்பவர் யார்?” என்ற கேள்வி அவருள் எழுந்தது.

அவர் தந்தை வேதவியாசரை அணுகி நடந்தவற்றைக் கூறினார்.

அப்போது வேதவியாசர்,
“உனக்குக் குருவாகத் தகுதியானவர் ஒருவரே உள்ளார்; அவர் மிதிலையின் மாமன்னர் ஜனகர்.”
என்று கூறினார்.

சுகர் ஜனகரைத் தேடிச் சென்றார். அரண்மனையை கண்டவுடன், அதன் செழுமையும் ஆடம்பரமும் அவரைக் கலங்கச் செய்தது.

“இவ்வளவு செல்வச் செழிப்பில் வாழ்பவர் எப்படித் துறவற ஞானியாக இருக்க முடியும்?”
என்று எண்ணி திரும்பி தந்தையிடமே வந்தார்.

வேதவியாசர் மீண்டும் அவரை அனுப்பினார்.
மறுமுறை சென்றபோது, ஜனகர் தன் மகாராணியுடன்  தோட்டத்தில் சந்தோசமாய் இருப்பதைக் கண்டார்.
“இவர் என் குருவாக இருக்க முடியாது.”
என்று மீண்டும் சந்திக்காமலேயே திரும்பி வந்தார்.

இவ்வாறு பன்னிரண்டு முறையும் அவர் சென்று சென்று திரும்பினார்.

பதிமூன்றாவது முறை புறப்படும்போது, வேதவியாசர் கூறினார்:

“மகனே! மனித வாழ்வில் பதினான்கு உயர்ந்த வாய்ப்புகள் உனக்கு உள்ளன. அவற்றில் பன்னிரண்டை நீ சந்தேகத்திலும் முன் முடிவு செய்யும் தீர்ப்பினாலும் வீணாக்கிவிட்டாய்.

இன்னும் இரண்டே வாய்ப்புதான் உள்ளன. கவனமாக இரு.”

இந்த வார்த்தைகள் சுகரின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

அவர் மீண்டும் ஜனகரின் அரண்மனைக்குச் சென்றார். அங்கு இருந்த ஆடம்பரத்தையும் வசதிகளையும் விரும்பவில்லை; இருந்தாலும் தந்தையின் வார்த்தையை மதித்து உள்ளே சென்றார்.

“நான் மன்னரைச் சந்திக்க விரும்புகிறேன்” என்றார்.
ஆனால் யாரும் அவரைக் கவனிக்கவில்லை.

மன்னர் ஜனகர் விசாரித்தபோது, சுகர் அரண்மனைக்குப் புறம் உள்ள குப்பைகள் எல்லாம் கொட்டப்படும் இடத்தில் நிற்பதாகத் தெரிவித்தனர்.

ஜனகர்,
“அவரை அங்கேயே நிற்கச் சொல்லுங்கள்.”
என்றார்.

சுகர் அசையாமல் நின்றார்.
ஒரு நாள் கடந்தது.
இரண்டு நாட்கள் கடந்தன.
மூன்று நாட்கள் கடந்தன.
நான்கு நாட்கள் கடந்தன.

குப்பைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவரது உடல்மீது விழுந்தன.

இருந்தும் பிறப்பிலேயே புனிதரும் தூயவருமானஅவர்   அசையவில்லை. எதனையும் சட்டை செய்யவில்லை.

நான்காம் நாள் ஜனகர்,
“அவரைக் குளிக்கச் செய்து, புதிய ஆடைகள் அணிவித்து என்னிடம் அழைத்து வாருங்கள்.”
என்றார்.

அவ்வாறே செய்தனர்.
சுகர் ஜனகரின் முன் வந்து நின்றார்.
அப்போது ஜனகர் கூறினார்:

“உன் வரவை முன்னிட்டு பலவிதமான கொண்டாட்டங்களையும் விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கிறேன். அவற்றைக் கண்டு மகிழ்ந்து வா.

ஆனால் இந்தப் பால் பாத்திரத்தை கைகளில் எடுத்துச் செல்ல வேண்டும்.”

அந்தப் பாத்திரம் விளிம்புவரை பால் நிரம்பி இருந்தது.
ஜனகர் தனது வீரர்களிடம்,
“இந்தப் பாத்திரத்தில் இருந்து ஒரு துளி பால் கூட கீழே சிந்தினால், உடனே அவனது தலையை வெட்டி விடுங்கள்.”
என்று கட்டளையிட்டார்.
தலைக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் போது மனிதன் எவ்வளவு விழிப்புடன் இருப்பானோ, அவ்வாறே சுகரும் மிகுந்த கவனத்துடன் நடந்தார்.

ஒரு சொட்டு பாலும் சிந்தாமல் அனைத்து விழாக்களையும் கடந்து மீண்டும் ஜனகரிடம் திரும்பினார்.
ஜனகர் புன்னகையுடன் கேட்டார்:

“விழாக்கள் எப்படி இருந்தன?

மகிழ்ச்சியாக இருந்ததா?”

ஸ்ரீ சுகர் பதிலளித்தார்:
“எந்த விழா? என் கவனம் முழுவதும் இந்தப் பால்மீதே இருந்தது. வேறெதையும் நான் காணவில்லை.”
அப்போது ஜனகர் கூறினார்:
“ஒரு பாத்திரம் பால் சிந்தாமல் இருக்க இவ்வளவு கவனம் தேவைப்பட்டால், பரம்பொருளோடு உள்ள இணைப்பை நிலைநிறுத்த அதை விடப் பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் நான் உலக வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளேன். உன்னால் இன்னும் ஒன்றில் கவனம் செலுத்தும் போது மற்றொன்றை இழக்காமல் இருக்க முடியவில்லை.

அதனால் உனக்கு இன்னும் சாதனைகள் தேவை.”

அவ்வாறு சுத்தம் அசுத்தம் நேரடி சூழலுக்கு ஆட்படுத்தி, பக்குவமாக்கி

ஜனகர், பிறப்பிலேயே ஞானியாகப் போற்றப்பட்ட ஸ்ரீ சுகரைத் தம் சீடனாக ஏற்றார்.

இந்தக் கதையின் ஞானம்
"உண்மையான ஆன்மீகம் என்பது உலகத்திலிருந்து ஓடிப்போகுவது அல்ல; உலகின் மத்தியில் இருந்தபடியே உள்ளார்ந்த இறைநிலையை இழக்காமல் வாழ்வதுதான்".

உடலிலிருந்து சிறிது விலகி நம்மை நாமே காணும்போது உடல் துன்பம் குறைகிறது.

மனதிலிருந்து சிறிது விலகி நம்மை நாமே காணும்போது மனவேதனை மறைகிறது.

அப்போது நாம் உலகில் முழுமையாக ஈடுபட முடியும்; ஆனால் எதிலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க முடியும்.

“எல்லாவற்றிலும் இரு; ஆனால் எதிலும் சிக்காதே.
செயலில் இரு; ஆனால் பற்றில் இராதே."
இதுவே மெய் உணர்ந்த ஞானியின் வழி.”

– ராஜரிஷி.
ஜனக மகாராஜர் போதித்த மௌனத்தின் ஞானம் இது!
🙏📚📚📚📚📚📚📚📚📚📚🙏

No comments:

Post a Comment