*ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்தா சற்குரு சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய சற்குரு போதம்*
*இல்லறமும் துறவறமும்”*
*சீடன் : சுவாமி, இல்லறம் என்றும், துறவறம் என்றும் சொல்கிறார்களே, அதில் இல்லறம் பெரிதா? துறவறம் பெரிதா?அதை எனக்குச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.*
*குரு : இல்லறம் பெரிது என்பதைப்பற்றி ஒரு உதாரணம் சொல்கிறேன் கேள். முன்காலத்தில் காசிபர் என்று ஒரு முனிவர் இருந்தார்.அவருக்கு மனைவி, மகன், மருமகள் என்று நால்வர்கள் இருந்தார்கள்.*
*அவர்கள் தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நெல் பதர்களைக் கொண்டுவந்து அதைக் குற்றி அரிசியாக்கி அதைச் சமைத்துக் கஞ்சியாக்கினார்கள்.*
*அப்போது அங்கு ஒரு சந்நியாசி வந்தார்.அவர் அந்தக் காசிபரிடம் சென்று நான் மூன்று நாள் பட்டினியாக இருக்கிறேன். எனக்கு ஏதாகிலும் ஆகாரம் கொடுத்துப் பசியடக்க முடியுமா? என்று கேட்டார். அப்பொழுது காசிபர் அவரை அழைத்து ஓர் ஆசனம் கொடுத்து இருக்க வைத்தார்.*
*பிறகு வீட்டிற்குள் சென்று அந்தக் கஞ்சியை நான்கு பேருக்கு நான்கு பாகமாகப் போட்டுத் தனக்கு ஒரு பாகமான கஞ்சியை ஒரு தொன்னையில் எடுத்துக் கொண்டு வந்து பசியாற்றிக் கொள்ளும்படி அந்தச் சந்நியாசியிடம் கொடுத்தார்.*
*அது அந்தச் சந்நியாசிக்குப் போதாதென்று அவர் மனைவி நினைத்து அவளுடைய ஒரு பாகக் கஞ்சியையும் அந்தச் சந்நியாசியிடம் கொடுத்தாள்.*
*அதுவும் அந்தச் சந்நியாசிக்குப் போதாதென்று அவருடைய மகனும் தன் பாகக் கஞ்சியையும் அந்தச் சந்நியாசிக்குக் கொடுத்தான்.*
*அவனுடைய மருமகளும் அந்தச் சந்நியாசிக்குப் போதாதென்று தன்னுடைய ஒரு பாகக் கஞ்சியையும் கொண்டுவந்து கொடுத்தாள்.*
*அப்பொழுது சந்நியாசிக்குத் திருப்தியாகிவிட்டது. பிறகு அவர் சாப்பிட்ட தொன்னையை வெளியில் கொண்டு வந்து போட்டார்கள்.*
*அந்தத் தொன்னையிலிருந்த எச்சிலை ஒரு கீரியானது சாப்பிட்டு விட்டு அந்தத் தொன்னையிலேயே புரண்டது.*
*அப்பொழுது கீரியின் நனைந்ததேகம் தங்கமாய்ப்போய்விட்டது.*
*அந்த எச்சில் தொன்னைக்கும் கூட எவ்வளவு புண்ணியம் இருக்கிறது.*
*பிறகு நால்வரும் சீவகாருண்யத்தின் பெருமையால் மோட்சம் அடைந்தார்கள். இப்படி இருந்தால் இல்லறத்தில் மோட்சம் கிடைக்கும்.*
No comments:
Post a Comment